திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.67 திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம்
ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை
    ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
தாளானைத் தன்னொப்பா ரில்லா தானைச்
    சந்தனமுங் குங்குமமுஞ் சாந்துந் தோய்ந்த
தோளானைத் தோளாத முத்தொப் பானைத்
    தூவெளுத்த கோவணத்தை அரையி லார்த்த
கீளானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
1
சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்
    தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை
நற்பான்மை அறியாத நாயி னேனை
    நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்
பற்பாவும் வாயாரப் பாடி யாடிப்
    பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்கக்
கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
2
அளைவாயில் அரவசைதத அழகன் றன்னை
    ஆதரிக்கு மடியவர்கட் கன்பே யென்றும்
விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை
    வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்
குளைவானை அல்லாதார்க் குளையா தானை
    உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு
கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
3
தாட்பாவு கமலமலர் தயங்கு வானைத்
    தலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்
கோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்
    கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை
    வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை
கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
4
நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை
    நால்வேத் தாறங்கம் நணுக மாட்டாச்
சொல்லானைச் சுடர்மூன்று மானான் றன்னைத்
    தொண்டாகிப் பணிவாட் கணியான் றன்னை
வில்லானை மெல்லியலோர் பங்கன் றன்னை
    மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
5
சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை
    தூமத்தம் வாளரவஞ் சூடி னானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ
    ஆலால நஞ்சதனை யுண்டான் றன்னை
விழித்தானைக் காமனுடல்ட பொடியாய் வீழ
    மெல்லியலோர் பங்கனைமுன் வேனி லானைக்
கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
6
உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற
    ஓங்காரத் துட்பொருள்தா னாயி னானை
விளரொளியை விடுசுடர்கள் இரண்டு மொன்றும்
    விண்ணொடுமண் ஆகாச மாயி னானை
வளரொளியை மரகதத்தி னுருவி னானை
    வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங்
கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
7
தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத்
    தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை
உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும்
    உள்குவார் உள்ளத்தி னுள்ளான் றன்னை
மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க
    வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி
கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
8
மாண்டார் எலும்பணிந்த வாழ்க்கை யானை
    மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு
பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்
    போகாதென் னுட்புகுந் திடங்கொண் டென்னை
ஆண்டானை அறிவரிய சிந்தை யானை
    அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்
கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
9
முறிப்பான பேசிமலை யெடுத்தான் றானும்
    முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப்
பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப்
    பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது
பொறித்தானைப் புரமூன்று மெரிசெய் தானைப்
    பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக்
கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
    கேடிலியை நாடுமவர் கேடி லாரே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com